இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
லண்டன்: பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யைக் காண அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் கூட்டம் கூடியதால், லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை நேரில்காண நீண்ட நேரமாகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்களும் ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்திற்கு தொழிலதி முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதலமைச்சர் பிரிட்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டனின் புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ (The Shard) கட்டடப் பகுதிக்கு அருகில் முதலமைச்சரைச் சந்திப்பதற்காகத் தவெக ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர்.
நேரம் செல்லச் செல்ல கூட்டத்தின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை எச்சரித்தது. அனுமதி அளிப்பதில் பாதுகாப்புச் சிக்கல்கள் எழுந்ததை அடுத்து, காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சரின் குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், காவல்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மதித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்குமிடம் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் பாதைகளில் பொதுமக்கள் யாரும் திரள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மணி கணக்கில் காத்திருந்தும் முதலமைச்சரை நேரில் பார்க்க முடியாமல் போனது ஏமாற்றமளித்தாலும், காவல்துறையின் பாதுகாப்புக் கருதிய இந்த நடவடிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக சென்னையிலும், முதல்வர் விஜய் செல்லும் ஊர்களிலும்தான் இதுபோலக் கூட்டம் கூடும். இப்போது வெளிநாட்டில் பெருமளவில் கூட்டம் திரண்டது லண்டனில் பேசு பொருளாகியுள்ளது.
விஜய் புகைப்படம், தவெக கொடியுடன் பலரும் வந்திருந்தனர். பெண்களும் அதிகளவில் திரண்டிருந்தனர். குழந்தைகளுடன் குடும்பமாகவும் பலர் வந்திருந்ததைக் காண முடிந்தது.