நிலநடுக்கத்தால் நடுங்கிய பாகிஸ்தான்.. அதான் சாக்குன்னு.. சிறையில் இருந்து தப்பிய 100 கைதிகள்!

Su.tha Arivalagan
Jun 03, 2025,11:17 AM IST

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி சிறைச்சாலையில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின்போது கைதிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் தப்பிச் சென்றதாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கராச்சி மாலிர் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷாவுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக சிந்து உள்துறை அமைச்சர் ஜியா-உல்-ஹசன் லஞ்சர் தெரிவித்தார். சிறை நிர்வாகத்தின் கூற்றுப்படி, 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர், அவர்களில் சுமார் 50 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


தப்பித்தவர்கள் தப்பிவிட்டார்கள்... மீதமுள்ளவர்களை எண்ணி சரியான எண்ணிக்கையை கண்டுபிடிப்போம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




பாகிஸ்தான் ஊடகமான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன், இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைச்சாலை அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடந்த மிக மோசமான சிறை உடைப்புகளில் இதுவும் ஒன்று என்று லஞ்சர் கூறினார்.


பல ஆண்டுகளாக சிறையில் இருந்ததாகவும், இப்போது தப்பித்து விட்டதாகவும் இரண்டு கைதிகள் சாலையில் ஓடும்போது கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.


திங்களன்று கராச்சியை உலுக்கிய நிலநடுக்கத்தின்போது, கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக தங்கள் அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போதுதான் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலையின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


நிலநடுக்கத்தின்போது கைதிகள் அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, சுமார் 700 முதல் 1,000 கைதிகள் சிறையின் பிரதான வாயிலில் கூடியுள்ளனர். அப்போது சுமார் 100 கைதிகள் வாயிலை உடைத்து தப்பிச் சென்றதாகவும், அவர்களில் 46 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும், சுமார் 18 முதல் 20 பேர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.


குற்றவாளிகளின் அடையாளங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் உள்ளன என்றும், அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 


சிறை உடைப்பு செய்தி வெளியானதும், எல்லைக் கட்டுப்பாட்டுப் படை (எஃப்சி) வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தலைமறைவாக உள்ளவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்எஸ்யூ), விரைவு அதிரடிப் படை (ஆர்ஆர்எஃப்) இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.


தேடுதல் பணி முடிந்ததும், காவல்துறை, ரேஞ்சர்ஸ் மற்றும் எஃப்சி படையினர் சிறைச்சாலையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று எஃப்சி வீரர்களும், ஒரு சிறைக் காவலரும் காயமடைந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரத்தில் ஒரு கைதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.