பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு உண்மையான அதிரடி திரில்லர் போலீஸ் வேட்டை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி வேட்டையை நடத்தியவர் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்பதுதான் கூடுதல் பரபரப்புக்குக் காரணம்.
இரவு 11:45 மணி.
ஹைதராபாத்தில் உள்ள அந்தப் பிரபல பப்பின் (Pub) வாசலில் வண்ண விளக்குகள் மின்னி மறைந்து கொண்டிருந்தன. காதைக் கிழிக்க வைக்கும் மேற்கத்திய இசை உள்ளேயிருந்து லேசாகக் கசிந்தது. சொகுசு கார்கள் வந்து இறங்க, நவநாகரீக ஆடைகளுடன் இளைஞர்களும் இளம்பெண்களும் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
அவர்களோடு சேர்ந்து ஒரு சாதாரணப் பெண்ணைப் போல, எளிய உடையில் அந்தப் பப்பிற்குள் நுழைந்தார் ஒரு பெண். அவர் வேறு யாரும் இல்லை.. கூகட்பள்ளி பகுதியின் துணை போலீஸ் கமிஷனர் ரிதிராஜ் ஐபிஎஸ்.
சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இல்லை; கம்பீரமான காக்கி உடையும் இல்லை. ஒரு சாதாரண கஸ்டமரைப் போல தனியாக உள்ளே சென்றார். அங்கே அரங்கேறும் அநாகரீக, சட்டவிரோத செயல்களை ஆதாரத்தோடு வேட்டையாட அவர் தீட்டிய அண்டர்கவர் மாஸ்டர் பிளான் அது!
உள்ளே நுழைந்த டிசிபி ரிதிராஜின் கண்கள் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு அசைவையும் உற்று நோட்டமிட்டன. அனுமதி மறுக்கப்பட்ட நள்ளிரவு நேரத்தைத் தாண்டியும் மது ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. காதை பிளக்கும் ஒலியுடன் டான்ஸ் ஃப்ளோர் அதிர, இளைஞர்கள் போதையில் மிதந்து கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை அவர் கண்ணில் பட்டது. அங்கு வரும் ஆண் கஸ்டமர்களை வளைப்பதற்காகவே சில பெண்களை வைத்து ஆன்லைனில் சாட்டிங் செய்து, வலைவிரித்து வரவழைக்கும் சட்டவிரோத நெட்வொர்க் அங்கு இயங்குவதை அவர் ரகசியமாகக் கண்காணித்து உறுதி செய்தார்.
இரவு 1:15 மணி. க்ளைமாக்ஸ் ஆப்பரேஷன்!
வலை விரித்தாகிவிட்டது, இனி வேட்டையாட வேண்டியதுதான் பாக்கி. ரிதிராஜ் தன் கையில் இருந்த ரகசிய சிக்னலை வெளியில் காத்திருந்த போலீஸ் படைக்கு அனுப்பினார். அடுத்த சில நிமிடங்களில்... பப்பின் கதவுகள் அதிரடியாகத் திறந்தன!
திடீரென உள்ளே நுழைந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் படையைப் பார்த்ததும், பப் மேலாளர்களும் அங்கிருந்த கூட்டமும் நிலைகுலைந்து போனது. யார் நீங்க? எப்படி உள்ளே வரலாம்? என்று பப் ஊழியர்கள் மிரட்டலாகக் கேட்க, அதுவரை சாதாரணப் பெண்ணாக நின்றிருந்த ரிதிராஜ், தன் அசல் அடையாளத்தைக் காட்டினார்.
அவ்வளவுதான்! அங்கிருந்தவர்களின் முகங்கள் இறுகிப் போயின. வியர்த்துக் கொட்டியது. சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்த பப் நிர்வாகத்தினர் மற்றும் பல நபர்கள் அந்த இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
ஒரு நாவலின் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் காட்சி போல, எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி தனியாகக் களம் இறங்கி, இந்த மாபெரும் நெட்வொர்க்கை வேரறுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் இந்த துணிச்சலான ஆப்பரேஷன்தான் இப்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.