தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
- தா.சிலம்பரசி
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
நாளும் ஒளி போல் பிறப்பேனே
தாழ்த்த நினைத்த தீமைகள் எல்லாம்
தடமாய் இருந்து உயர்த்துமே
அடிமுறியாத வேரென நான்
அழியாப் புயலாய் எழுவேனே
காற்றடித்தாலும் தீபமென தெளிவாய் நின்று விளங்குவேனே
கடற்கரை மோதும் அலை போலே
எல்லை கடந்தும் எழுவேனே
புயல் புரளினும் நிமிர்ந்து நின்று
புது விழா பாடல் பாடுவேனே
எண்ணிப் பார்த்தே திகைத்துப் போவார்கள்
எதிர்ப்பினில் கால்கள் தடுமாறி
என்னால் வீழ்ந்திடக் காண்பார்கள்!
என்னை சோதித்த உலகமே
இனித் தலைவணங்கக் காத்திருக்கும்
இன்று நான் ஏந்திடும் வெற்றி முழக்கத்தின் முன்னே
என்னை வென்றிட முடியாதே!
எவர் என்னைத் தடுக்க நின்றாரோ -
இன்று அவர்தம் கரங்களே எனக்குச் சாமரம் வீசும்!
என் நிழலைக் கண்டே ஒதுங்கிப் போவார்கள்
போராட்டத்தின் பலம் அவர்களுக்கு இன்று புரியும்!
(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)