ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!
சென்னை : கொரோனா பெருங்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்து சாதித்து காட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக தற்போது பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 56.
ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை வெங்கடேசன் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவரது தாயார் ராணி வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், முன்னாள் எம்எல்ஏ ஆவார். இந்தத் தம்பதியினருக்கு மகளாக சென்னையில் பிறந்தார் பீலா.
அவருடைய தந்தை எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். பீலாவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி. தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பீலா வெங்கடேசன் 1992-ம் ஆண்டு ராஜேஷ் தாஸ் என்ற காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர்.
முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பீலா வெங்கடேசன் அவரை 2023 ஆம் ஆண்டு பிரிந்தார். கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பீலா பணியாற்றினார். தினசரி அவர் கொடுத்த கொரோனா அப்டேட்டுகளும், அவர் கொடுத்து வந்த விளக்கங்களும் அந்த சமயத்தில் வெகுவாக பேசப்பட்டன.
அதன் பின்னர் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களாக பீலா வெங்கடேசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.