டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை

Su.tha Arivalagan
Feb 02, 2026,01:04 PM IST

மும்பை : 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் அரசு புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது மௌனத்தைக் கலைத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.


பிப்ரவரி 15-ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. உலகக் கோப்பையின் மற்ற போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடும் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐசிசி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், ஒரு சர்வதேச தொடரில் தகுதி பெற்ற அனைத்து அணிகளும் சமமான விதிகளின் கீழ் விளையாட வேண்டும் என்பதே அடிப்படை. ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது உலகளாவிய விளையாட்டுத் தொடரின் மாண்புக்கு எதிரானது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை மற்றும் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. பாகிஸ்தானின் இந்த முடிவு விளையாட்டின் புனிதத்தன்மையைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐசிசி வருத்தம் தெரிவித்துள்ளது.




அரசாங்கக் கொள்கைகளில் அந்தந்த நாடுகளின் முடிவுகளை மதிப்பதாகத் தெரிவித்தாலும், இந்தப் புறக்கணிப்பு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கும், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களுக்கும் எதிரானது என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இத்தகைய முடிவுகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும், உலகளாவிய கிரிக்கெட் அமைப்பில் அந்நாட்டின் பங்களிப்பையும் நீண்ட காலத்திற்குப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.


தொடரை வெற்றிகரமாக நடத்துவது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பு. எனவே, அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் ஒரு சுமுகமான தீர்வை எட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சிக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணிக்கும் பட்சத்தில், ஐசிசி விதிகளின்படி இந்தியாவுக்கு 'வாக்-ஓவர்' (Walkover) முறையில் வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அபராதம் அல்லது தரவரிசைப் புள்ளிகள் குறைப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.