எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், தனது இசைக்கச்சேரி வருவாய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ப்பதற்ற சூழல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பூஜ்ச், பதன்கோட், காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் அதனை இடைமறித்து அழித்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்களை பயன்படுத்திய வான்வழி தாக்குதல்களை முயற்சித்து வருவதால் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனை முறியடிக்க இந்திய ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பதட்டமான சூழல் உருவாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் காஷ்மீர் பகுதிகள் போர்க்கள பூமியாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,
இந்த வருட தொடக்கத்தில் நான் என் முதல் சிம்பொனியை இசையமைத்து அதற்கு வேலியண்ட் என்று பெயரிட்டேன். இப்போது நிஜத்தில் வீரம் கொண்ட நம் ஹீரோக்கள் பஹல்காமில் நடந்த தாக்குதலை எதிர்கொள்ள எல்லைகளில் துணிச்சல், துல்லியம், மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். இத்தர்ணத்தில் பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நான் என் இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையையும், மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்.
தீவிரவாதத்தை அழிக்கவும், எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நம் வீரமிக்க ராணுவ வீரர்களின் மாபெரும் முயற்சிக்காக நான் இதை செய்கிறேன். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.