கோவையில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..மே 31 தேதிக்கு ஒத்திவைப்பு..!
கோவை: கோவையில் 17ஆம் தேதி நடைபெற இருந்த இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நிகழ்ச்சி, மே 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக, இந்த இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்க முடிவு செய்ததாக விழா கமிட்டி அறிவித்துள்ளது.
கோவைப்புதூரில் உள்ள 'ஜி ஸ்கொயர்' 7ஹில்ஸ் மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நிகழ்ச்சி வரும் மே 17ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர்.இதனால் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இளையராஜாவின் இசை கச்சேரி நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதாவது கோவைப்புதூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே பெற்றுள்ள டிக்கெட்டுகளை பயன்படுத்தி ரசிகர்கள் பங்கேற்கலாம் எனவும் விழா கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இசைஞானி இளையராஜா நிஜத்தில் வீரம் கொண்ட நமது ஹீரோக்கள் பஹல்காமில் நடந்த தாக்குதலை எதிர்கொண்டு, தீவிரவாதத்தை அழிக்கவும், எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாபெரும் முயற்சியை செய்து வரும் ராணுவ வீரர்கள் என குறிப்பிட்டு, தனது இசைக்கச்சேரி வருவாய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.