இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!
சென்னை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் கோடை காலம் தொடங்கி ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதற்கிடையே ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
அதன்படி, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது அக்னி நட்சத்திர காலமான மே மாதத்தில் வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயில் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்
இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே இறுதியில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
அதாவது மே 13ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.