மக்களே என்ஜாய்..தமிழ்நாட்டில் இன்றும், 14, 15 ,16, தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
May 12, 2025,09:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்றும், வரும் 14, 15 ,16, ஆகிய நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



தமிழ்நாட்டில் கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி, தற்போது வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் என்னதான் கோடை மழை பொழிந்தாலும் கூட, வெயில் தாக்கத்துடனும் வெப்ப அலையும் அதிகரித்து வருகிறது. இதனால் அனலை தகிக்க முடியாமல் மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்றும், வரும் 14, 15, 16, ஆகிய நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.


இன்று கனமழை: 




நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.


14ஆம் தேதி கனமழை: 


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


16ஆம் தேதி கனமழை:


கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


இன்று முதல் 16ஆம் தேதி வரை மிதமான மழை: 


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதே சமயத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புக் குறைவு. எனினும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை துவங்கக்கூடும் என்பது நினைவிருக்கலாம்.