வங்கக்கடலில் நிலவிவரும்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடையும்.. வானிலை மையம் தகவல்..!
சென்னை: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் தாழ்வு மண்டலமாகவே வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், அருவுகளில் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயத்தில் காற்று சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
உதகையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, அங்குள்ள தவளைமலைப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் உதகை -கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் வரும் 30 தேதி வரை கனமழை நீடிக்கும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது,மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (மே 29, 30) அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.