மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Manjula Devi
Apr 28, 2025,02:07 PM IST

சென்னை: இந்த ஆண்டு இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொதுவாக தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் அதிகரிப்பதுடன் வெப்ப அலையும் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் அதிகம்  பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் மே மாதத்தில்  கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் மே, ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அதன்படி, தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும், வட தமிழக பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் வெயில் சதத்தை தாண்டி கொளுத்துகிறது. குறிப்பாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அப்பகுதிகளில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 




இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கத்திரி வெயில் மே நான்காம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் மொத்தம் 25 நாட்கள் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனால் பொதுமக்கள் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் முன்கூட்டியே கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு யுத்திகளை கையில் எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அப்போதுதான் தேவையில்லாத தொற்றுக்களும், உடல் உபாதைகளையும் தவிர்க்க முடியும்.  


முதலில் மக்கள் அக்னி நட்சத்திர காலகட்டமான ஏப்ரல் மே 4 முதல் 28ஆம் தேதி வரை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெயிலை சமாளிக்க அவ்வப்போது நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இயற்கை பானங்களையும், பழ ரசங்களையும் அதிகம் பருக வேண்டும். செயற்கை நிறமூட்டப்பட்ட ரசாயனம் கலந்த பானங்களை பருக கூடாது.


ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு முறை உடலை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மையான இலகுவான பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும்.


எளிதில் செரிக்க கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சூட்டை அதிகம் கிளப்பக்கூடிய அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் காரம், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.