சமையல் அறையில்.. நான்!

Su.tha Arivalagan
Nov 03, 2025,10:27 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


தூக்க கலக்கம் தெளியல 

என்ன சமைப்பது தெரியல 

சமையல் அறையில் நான் ...


அங்கே இங்கே ஓடுறேன் 

குளிர்பதனப்பெட்டிய திறக்கிறேன் 

எதையோ அங்கே தேடுறேன்....


அரிசி பருப்பு காய்கறிகளுடன் 

சமையலறை காத்திருக்குது

குழந்தைகள் பள்ளி செல்லும் நேரம்தான்.. 


பெரியவர்கள் தேநீர் பருகும் நேரம்தான் 

கையும் காலும் ஓடல....

கடிகாரம்  மனதில் ஓடுது....




சமையல் தடபுடலா நடக்குது 

உணவின் வாசம் வாசல் தாண்டி மணக்குது  

சுடசுட  டப்பாவில் சென்று அமருது .. 


குழந்தைகள்  பள்ளிக்கூடம் போனதும்...

கணவர் அலுவலகம்சென்றதும் 

வீட்டுவேலைகள் காத்திருக்குது எனக்கே எனக்கு என்றுதான் ... 


சமையல் அறையே போர்க்களம்

சமைத்து முடித்துப் பார்த்தாலே...


என்னை சீக்கிரம் தூய்மை செய் என கேட்பது போல பார்க்குது 

தூய்மை செய்துவிட்டாலே 

பளபளன்னு  சிரிக்குது...

அழகை ரசித்துப் பார்க்கிறேன் 

இன்னும் என்ன செய்யவேண்டுமென நினைக்கிறேன்.. 

 

நேரம் ஆச்சு என்று குரல் கேட்குது...

அலுவலகம் நோக்கி பயணம் தொடருது.....

காலை முதல் மாலை வரை 

பம்பரம் போல சுழலுற

மாலை வீடு திரும்புறேன்

சமையல் அறையில் நிக்குறேன்..


தினமும் தொடரும் இக்கதைதான் ....

அதிகாலை தூக்க கலக்கம் கலையாமலே ....


ஏதோ சிந்தனை ஓடுது 

பெண்ணே உன்னை நினைத்து தான் மனசு பெருமை கொள்ளுது...


சமையல்அறையில்நான்....

இல்லை ..இல்லை...  நாம்....

எல்லாத்துறையிலும்

நிக்குறோம் 

சிறப்பாக நிர்வகிக்கிறோம்...


வீட்டு நலன், நாட்டு நலன் காப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறோம்...


சிந்தனை மனதில் தவழுது...

பெருமை கொள்ளச் செய்யுது...

பெண்கள் நாட்டின் கண்கள்

என்று தான் 

தேசம் பெருமைகொள்ளுது.. 

எத்தனை பொறுப்புகள் என்றாலும் சமையலறையே முதன்மை தான்

இது ஒவ்வொரு வீட்டின் உயிர் நாடி தான்... 

 உலக அறையில் சாகசம் தான்

வீட்டின் அறையில் சமையல் தான் 

நினைவலைகள் மனதில் மிதக்க

சமையல் அறையில் நான்.. 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)