பிளஸ் டூ பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. அரியலூர் முதலிடத்தை பிடித்து சாதனை..!
சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம் 98.82 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வை மொத்தம் 8.21 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், அரியலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.82 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல், ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.98 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.53% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் கோவை 97.48 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், கன்னியாகுமரி 97.01 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:
கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181 மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.