மக்களிடையே செம ஆர்வம்.. அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்.. இதுவரை 3,24,884 பேர் சேர்ந்தனர்!

Meenakshi
Apr 25, 2024,05:57 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சிலவருடங்களாக அரசு பள்ளிகளில் மாணவர்களுடைய சேர்க்கை குறைவாக இருந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் முன்னெடுக்க கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர் சேர்க்கையை ஒரு திருவிழாவாக நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்தது. அதற்கான சுற்றறிக்கை அனுப்பபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டம், சீருடை, உயர்கல்விக்கான வாய்ப்புகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் செயல்படுத்தபடுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை திருவிழா தொடங்கப்பட்டது.



பொதுவாக ஆகஸ்ட் மாதம்  வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறக்கூடிய நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே சுமார் 3,24,884 பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.  அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும், அரசு உதவி பெரும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மேலும் அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது. சிறப்பான முறையில் போதனை முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன . காலை உணவு, மதிய உணவு, இலவச சீருடை, புத்தகங்கள், ஷு, பேக், கம்ப்யூட்டர் என அனைத்தும் வழங்கப்படுகிறது. பள்ளி வளாகங்களிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசுப் பள்ளியில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.