தலைகொடுத்து தாயகத்தை மீட்டுத்தந்த.. தியாகத் தலைவர்களுக்கு.. நன்றி சொல்வோம்!

Su.tha Arivalagan
Aug 15, 2025,11:40 AM IST

சுதந்திர காற்றை சுவாசிக்க

தன் சுவாசக் காற்றையே

தியாகம் செய்த

நம் தலைவர்களை

தலைவணங்க வேண்டிய நாள் இன்று!


வண்ணங்கள் வேறானமோ தவிர நம்

எண்ணங்களில்

இந்தியர்கள் என்று

ஒன்றானதால்

ஒருங்கிணைந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய 

நாள் இன்று!




பசுமை, தியாகம், வீரமும் கொண்ட

மூவர்ணக்கொடியை

நம் மூச்சு காற்று இருக்கும் வரை

உயிர் மூச்சு போன்று

காத்திடுவோம் என்று

உறுதி எடுக்க வேண்டிய

நாள் இன்று!


ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன்

தன் முதல் சுதந்திர உரையை தொடங்கிய

நேதாஜியை நெஞ்சுருக

நன்றி கூற வேண்டிய

நாள் இன்று!


கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தம் ஒன்று செய்து

மகாத்மா காந்தியடிகள்

வாங்கித்தந்த சுதந்திரத்தை

வாயார வாழ்த்தி

மனதாரப் புகழ வேண்டிய

நாள் இன்று!


குருதி மண்ணில் கொட்டினாலும்

நம் தேசியக் கொடியை

மண்ணில் விழாமல்

தன் உயிரை இழந்த

கொடிகாத்த குமரனை

கொண்டாடி பெருமைப்பட வேண்டிய

நாள் இன்று!


சுதந்திரம் எனது பிறப்புரிமை

அதை அடைந்தே தீருவேன் என்று போராடிய

பாலகங்காதர திலகரை

உணர்வுபூர்வமாய் 

பாராட்ட வேண்டிய

நாள் இன்று!


மண்ணில் உயிர் மாயும் வரை 

இந்திய மண்ணிற்காகவே வாழ்ந்து மறைந்த

சுபாஷ் சந்திர போஸ் அவர்களை

மனதார நினைத்து 

பார்க்க வேண்டிய 

நாள் இன்று!


நாமெல்லாம் ஒவ்வொரு மதமாக இருந்தாலும்

ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று கூறி

நன்றி சொல்வோம்!


மொழிகளில் நாங்கள் வேறானாலும்

பாரதத் தாயின் மடியில்

அனைவரும் பிள்ளைகளாவோம் என்று கூறி

நன்றி சொல்வோம்!


நம் நாட்டின் பெரும் தலைவர்கள்

தலைகொடுத்து வாங்கித்தந்த சுதந்திரத்தை

எங்கள் தலை மண்ணில் சாயும் வரை 

காப்போம் என்று கூறி

நன்றி சொல்வோம்!


சாகும் வரை சமத்துவத்தை

பேணிக்காப்போம் என்று உறுதி கூறி

நன்றி சொல்வோம்!


தலைகொடுத்து தாயகத்தை மீட்டுத்தந்த

தியாகத் தலைவர்களுக்கு

நம் தலை மண்ணில் சாயும் வரை

நன்றி சொல்வோம்!


இந்திய மண்ணில்  பிறந்த

ஒவ்வொரு குடிமகனுக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

ஜெய்ஹிந்த்!


கவிதை: வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை.