பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

Su.tha Arivalagan
May 10, 2025,08:29 PM IST

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு விட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான சூழல் தணியும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்தி விட முடிவு செய்துள்ளன. அதை தற்போது இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில் மாலை 5 மணியுடன் நிலம், வான், நீர் வழியான அனைத்து விதமான தாக்குதல்களையும் இந்தியா நிறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்களும் இதுதொடர்பாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். உரிய உதத்ரவுகள் இரு தரப்பு ராணுவத்திற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இரு நாடுகளுக்கு இடையே 12ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்.


தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு தொடரும்- ஜெய்சங்கர்




மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், இந்தியாவும், பாகிஸ்தானும், துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. அவற்றை நிறுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. அதேசமயம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதில் இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.


இந்த தகவல்களின் மூலமாக இரு நாட்டு தாக்குதல்களும் உடனடியாக முடிவுக்கு வந்துள்ளன. பெரும் போர் மூளுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த இரு நாட்டு மக்களுக்கும் இது நற்செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.