அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

Su.tha Arivalagan
Mar 08, 2026,08:49 PM IST
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியத் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், தொடக்க விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா இன்று முறியடித்து அசத்தியது.

இதற்கு முன் 2009-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் கம்ரான் அக்மல் மற்றும் ஷாசைப் ஹசன் ஜோடி 48 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.



இன்றைய போட்டியில் முதல் 5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்து அந்தச் சாதனையை இந்தியா தகர்த்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 51 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரும் சஞ்சு சாம்சனும் இணைந்து  முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டினர்.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இது 2026 டி20 உலகக் கோப்பையின் அதிவேக அரைசதமாகும். 

அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த  பிறகும் கூட தற்போது சஞ்சு சாம்சனும், இஷான் கிஷனும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3வது அரை சதத்தை நோக்கி நடை போட்டு வருகிறார்.