மிரட்டிய இங்கிலாந்து.. இளம் புயல் ஜேக்கப் பெத்தேலின் சதம்.. வீணானது.. பைனலில் இந்தியா!
மும்பை: இங்கிலாந்தின் அசாத்தியப் போராட்டம் வீணானது. இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலின் அதிரடி சதம் அந்த அணிக்குக் கை கொடுக்காமல் போய் விட்டது. இந்தியா கடைசி நேரத்தில் காட்டிய மாயாஜால பந்து வீச்சு மற்றும் பீல்டிங், நம்மை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றது.
254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் (25) மற்றும் பில் சால்ட் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.
ஆனால் மறுபக்கம், 22 வயதேயான ஜேக்கப் பெத்தேல்ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், 45 பந்துகளில் தனது டி20 சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்தார். வருண் சக்ரவர்த்தியின் ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி மைதானத்தையே அதிர வைத்தார்.
பெத்தேல் ஒருபுறம் அதிரடி காட்டினாலும், மறுபுறம் இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை ஏற்படுத்தினர். முக்கியமான 18-வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே வழங்கி இங்கிலாந்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் பும்ரா. ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் சாம் கர்ரன் (18) விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவிற்கு நிம்மதி தந்தார்.
ஜேக்கப் இருந்தவரை இந்தியாவுக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது. ஆனால் அவர் அவுட்டான பிறகு இந்திய அணி மொத்தமாக அழுத்தத்தைக் கீழிறக்கி இங்கிலாந்தை நிலை குலைய வைத்து விட்டது. இறுதியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபாரமான முறையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றாலும் கூட இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் அசத்தி விட்டார் என்பதை மறுக்க முடியாது.
மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து அணியும் கோப்பைக்காக மோதும்.