புற்றுநோயோடு போராடும் இந்தியா!

Su.tha Arivalagan
Feb 04, 2026,04:26 PM IST

- "பக்தித் தென்றல்" பாவை. பு.


 கடந்த 2024 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 9வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) தடுப்பூசி திட்டத்தினை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 


இதன் பின்னர் பீகார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்திலும் தற்போது இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஜனவரி 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் HPV வைரஸ் க்கு எதிரான தடுப்பூசி திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த தடுப்பூசியானது 14 வயதிற்கு மேற்பட்ட 3,38,649 பெண் குழந்தைகளுக்கு போடப்படவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 




முதன்முதலில் HPV தடுப்பூசியை 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) உதவியுடன் பஞ்சாப் மாநிலத்தில் மாநில அரசாலும், 2018 ஆம் ஆண்டு சிக்கிம் மாநில அரசாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 


ஏன் இந்த HPV தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் என்ன? 


ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV)  தொற்று காரணமாக பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உலகளவில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்திலும், இந்த HPV புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச அளவில், கருப்பை வாய் புற்றுநோயால் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது என்பது வேதனையானது.


இளம் வயதில் பாலியல் உறவு காரணமாகவும் அல்லது அதிகளவு பாலியல் உறவு காரணமாகவும், இந்த HPV வைரஸ் பல ஆண்டுகளாக கருப்பை வாய் பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது அங்குள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக உருவெடுக்கிறது.  இந்த HPV வைரஸ் பாலியல் மூலமாக மட்டுமின்றி நீண்ட காலம் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது, புகை பிடித்தல், நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமான நிலையில் உள்ளவர்கள், அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் என பல்வேறு காரணங்களால் இந்த நோய் வேகமாக பரவுகிறது. 


ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் இந்த கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்த HPV வைரஸ் ஆனது அனைவருக்கும் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை. வராமல் தடுக்கவும் வழியுண்டு. ஆரம்பகாலத்திலே பரிசோதனை மூலம் தெரிந்துக்கொண்டாலும், அல்லது விழிப்புணர்வுடன் இருந்தாலும் தற்காத்துக் கொள்ளலாம். 


இன்று பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்


உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் மாரடைப்புக்கு அடுத்த இடத்தில் புற்றுநோய் உள்ளது. இதனால் வருடத்திற்கு 1கோடி மக்கள் உயிரிழைக்கிறார்கள். உலகத்தில் உயிரிழக்கின்ற 6 இல் 1 நபர் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறக்கிறார் என்கிறது உலக நல்வாழ்வு மையம். 


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  7லட்சத்தில் இருந்து 14 லட்சம் பேர் புதியதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக பதிவு செய்யப்படுகிறது.. இதில் ஆண்டின் இறப்பு விகிதம் 5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உள்ளது. 2022 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் மேல் 2050 இல் 3 கோடியே 50 லட்சமாக மாறும் என்றும் இது 77 சதவீதம் அதிகம். 


உலகளவில் புகைப்பிடித்தல் காரணமாக நுரையீரல் புற்றுநோய் தான் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. 

இது அனைத்து மற்ற புற்றுநோய்களை விடவும் 28 சதவீதம் அதிகம். நுரையீரலை தொடர்ந்து பெருங்கடல், கல்லீரல், போன்ற புற்றுநோயால் அதிகளவில் ஆண்களும், மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோயால் பெண்களும் அதிகளவில் மரணமடைகிறார்கள். 


உலகளவில் நுரையீரல் புற்றுநோயால் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 1.8மில்லியன் இறப்புகள் பதிவாகிறது. 


பொதுவாக புற்றுநோய்க்கு புகையிலை மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்றாலும் மாறிவரும் காலநிலை, உலகமயமாக்கலுக்கு பிறகு நம் நாட்டிற்கும் தட்பவெப்பநிலைக்கு ஒத்துவராத உணவு முறைகள், ரசாயன உரங்களின் தாக்கம், பரம்பரையாக தொடர்வது, நாள்பட்ட கட்டி காயம், காலம் கடந்து நோயை கண்டறிவது போன்ற காரணங்களாலும் நோயின் நிலையும் இறப்பின் விகிதமும் அதிகரித்துள்ளது. 

 

புற்றுநோயின் தாக்கமும்  வீரியம் அதனால் ஏற்படும் மிக மோசமான பின் விளைவுகளையும் இதன் காரணமாக இயல்பு  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக பிப்ரவரி 4 தேதியை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.


புகையிலை மது பழக்கத்தை தவிர்த்தல், சத்தான ஆரோக்கியமான உணவு, போதிய உடல் உழைப்பு, இயற்கையான சூழ்நிலையில் இயற்கையோடு வாழ்வது , குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை மற்றும் தடுப்பூசி  மூலம் தங்களையும் தங்கள் சந்ததியினரையும் தற்காத்துக்கொள்வது அவசியம்.