இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை

Su.tha Arivalagan
Jun 09, 2026,12:35 PM IST

டெல்லி: சர்வதேச அளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் உலகப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது 2026 ஆம் ஆண்டிற்கான புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மதிப்பீட்டின்படி இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 180 ஆக இருந்த நிலையில், தற்போது அது 190 ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் 10 புதிய அணு ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிப்ரி தெரிவித்துள்ளது.


பிராந்திய பாதுகாப்புச் சூழல் மற்றும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் இந்தியா தனது அணு ஆயுதக் கட்டமைப்பை நவீனமயமாக்கி வருகிறது. குறிப்பாக, சீனாவின் அணு ஆயுதப் பெருக்கம் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்தியா தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தி வருகிறது.


நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், ஒரே ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று வெவ்வேறு இலக்குகளைத் தாக்கும் மல்டிபிள் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள் (MIRV) தொழில்நுட்பம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் போன்ற நவீன உத்திகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.


இந்தியாவின் ஐஎன்எஸ் அரிஹந்த் போன்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடல் வழியிலான அணு ஆயுதப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகும் எதிரி நாட்டைத் திருப்பித் தாக்கும் திறனை இது இந்தியாவிற்கு வழங்குகிறது.




உலகில் அணு ஆயுதம் வைத்துள்ள ஒன்பது நாடுகளில் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா) சீனாவே மிக அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகிறது. சீனாவின் வசம் தற்போது 620 அணு ஆயுதங்கள் இருப்பதாக சிப்ரி மதிப்பிட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்தியா எப்போதும் தனது அணு ஆயுதக் கொள்கையில் முதலில் பயன்படுத்தக் கூடாது (No First Use) மற்றும் குறைந்தபட்ச நம்பகமான தடுப்பு ஆற்றல் (Minimum Credible Deterrence) ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி வந்தாலும், மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப தனது தற்காப்புத் திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.


அதேபோல உலக அளவில் ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடுகளில் டாப் 5 இடத்துக்குள் இந்தியா உள்ளதாகவும் சிப்ரி தெரிவித்துள்ளது.