கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
டெல்லி: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டிக்காவிட்டாலும் கூட, ஒரு நாட்டின் தலைவரை இழந்ததற்காக இந்தியா தனது இரங்கலைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையே நீண்டகால மற்றும் நெருக்கமான நட்பு உறவு உள்ளது. ஈரான் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒரு தலைவர் கொல்லப்பட்டிருக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு இரங்கல் செய்தியையாவது இந்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். தாக்குதலை நடத்தியவர்களை நாம் கண்டிக்கத் தேவையில்லை, ஆனால் உயிரிழந்தவருக்கு மரியாதை செலுத்துவது நமது ராஜதந்திர மரபு.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியா தனது நிலைப்பாட்டைச் சரியாகக் கையாள வேண்டும். ஈரானுடன் நமக்கு இருக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் இந்தியா காட்டிய மௌனம் வியப்பளிக்கிறது.
இந்தக் கொலைக்குப் பின்னால் யார் இருந்தாலும், அது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய நிகழ்வுகள் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் சசி தரூர்
மத்திய அரசு கமேனி படுகொலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு விரிவான அறிக்கையையும் இதுவரை வெளியிடாத நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சசி தரூரின் இந்த விமர்சனம் அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.