அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியை ரசிக்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்தப் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்ற அச்சமும் கூடவே நிலவுகிறது.
டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்க முதலில் பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது. ஆனால் பல்வேறு சமரசப் பேச்சுக்களுக்குப் பின்னர் இந்தியாவுடன் விளையாட முடிவெடுத்தது பாகிஸ்தான். அந்த வகையில் இரு அணிகளும் இன்று கொழும்பில் நடைபெறும் அனல் பறக்கப் போகும் போட்டியில் மோதவுள்ளனர்.
இந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. கொழும்பில் பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய 65% வாய்ப்புள்ளதாகவும், இரவு நேரத்தில் இது 25% முதல் 49% வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ் போடும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆட்டம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
குரூப் சுற்று ஆட்டம் என்பதால், இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். ஏ பிரிவில், தற்போது இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 4 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இரு அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும்.
ஆனால் மழை வரக் கூடாது, இரு அணிகளும் வழக்கம் போல ஆக்ரோஷமாக மோத வேண்டும் என்ற ஆர்வம் இரு நாட்டு ரசிகர்களிடையே நிலவுகிறது. உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கிரிக்கெட் திருவிழா மழையால் பாதிக்கப்படாமல் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 8 முறை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியுள்ளன. அதில் 7 முறை இந்தியாவும், ஒரு முறை பாகிஸ்தானும் வென்றுள்ளன. இன்றைய போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நமது ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான் ரசிகர்களோ, தங்களது அணி வெல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டுள்ளனர். எது நடந்தாலும் சூப்பரான கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.