பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
சென்னை: 2025-ஆம் ஆண்டு விடைபெற்று 2026-ஆம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மக்கள் கோவில்களில் வழிபாடு நடத்தியும் பொது இடங்களில் கூடி கேக் வெட்டி கொண்டாடியும் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நூற்றாண்டின் கால் பகுதி நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்காக வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் ஆண்டின் கடைசி சூரிய மறைவை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர், இருப்பினும் மேகமூட்டம் காரணமாக சூரிய மறைவை காண முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள் தேர்தல் பிரச்சார நெடியுடன் அமைந்திருந்தன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் தனது அரசின் சாதனைகள் 2026-லும் தொடர வேண்டும் என குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாகக் கூறி, 2026 அந்த அமைதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வாழ்த்தினார்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஏற்பட்ட தேவை அதிகரிப்பால் மல்லிகைப் பூ கிலோ 4,000 ரூபாய் வரை உயர்ந்தது. பாதுகாப்புப் பணிகளுக்காகச் சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைச் சாலைகள் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் விபத்துகளைத் தவிர்க்கக் கடற்கரைகளில் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.