பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா.. பத்திரமாக திரும்பினார்

Meenakshi
May 14, 2025,05:44 PM IST

டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பூர்ணம் குமார் ஷா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை  பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.


காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா பாகிஸ்தானிடையே அன்று முதல் பதற்றம் நிலவியது. இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி எல்லை தாண்டி தவறுதலாக பாகிஸ்தான் சென்றார் பாதுகாப்பு படை(BSF) வீரர் பூர்ணம் குமார். 


இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரை அழைத்து வர இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியா-பாகிஸ்தானிடையே மோதல் போக்கு இருந்ததால், பாகிஸ்தான் அவரை விடுவிக்க மறுத்து வந்தது. தற்போது இந்தியா-பாகிஸ்தானிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால்,  சுமார் 20 நாட்களுக்கு பின்னர் இந்திய ராணுவத்திடம் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வழியாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 




இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தானில் இருந்து பூர்ணம் குமார் ஷா இன்று காலை 10,30 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.   இவர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரோஸ்பூர் செக்டார் பகுதியில்  பணியில் இருந்த போது, பூர்ணம் குமார் ஷா தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார்.


இதனால் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை தடுத்து வைத்தனர். பாகிஸ்தான் ரேஞ்சர்களுடனான தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் முகமது அல்லா என்பவரை இந்தியா விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.