ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை (BSF) சனிக்கிழமை கைது செய்துள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூர் செக்டாரில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்த BSF வீரர் பூர்ணம் குமார் சாஹு ஏப்ரல் 23 அன்று தவறுதலாக சர்வதேச எல்லையை கடந்த நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர் தற்போது BSF-ன் ராஜஸ்தான் எல்லைப்பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எல்லை தாண்டும் BSF வீரர்களை பரஸ்பரம் திருப்பி அனுப்ப இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலையான நடைமுறை உள்ளது. ஆனால் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் சாஹுவை இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இந்நிலையில் இந்தியா கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சரை என்ன செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் நடவடிக்கையைப் பொறுத்தே இந்தியாவின் நடவடிக்கையும் இருக்கும் என்று தெரிகிறது.
சாஹுவை விடுவிப்பது தொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், பாகிஸ்தான் தரப்பு எந்த நேரக்கெடுவையும் உறுதிப்படுத்தவில்லை, அவரது தற்போதைய நிலை என்னவென்று கூட தெரிவிக்கவில்லை. 182வது பட்டாலியனில் பணியாற்றும் சாஹு, எல்லைக்கு அருகே நிலம் இந்திய விவசாயிகளைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட 'கிசான் காவல்படை' பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுப்பதற்காக தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
இரு தரப்பிலும் இதுபோன்ற தவறுகள் நடப்பதுண்டு. அப்படி எல்லை மாறி வருபவர்களை முறைப்படி அவரவர் நாட்டு ராணுவத்திடம் ஒப்படைப்பதுதான் நடைமுறை. ஆனால் சாஹு விவகாரத்தில் பாகிஸ்தான் வழக்கத்திற்கு விரோதமாக தன்னிடமே வைத்துள்ளது.
இதற்கிடையே 10வது நாளாக ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) அருகே குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பல செக்டார்களில் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் காரணமின்றி சிறிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்திய ராணுவப் பிரிவுகள் உடனடியாகவும் அதே அளவிலும் பதிலடி கொடுத்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் ஜம்மு காஷ்மீரில் பிரபலமான சுற்றுலா தலமான பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதலில் விடுமுறையில் இருந்த பொதுமக்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாடுகளின் உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.