இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுறுவ முயன்ற கேரள நபர்.. சுட்டுக் கொன்ற ஜோர்டான் ராணுவம்

Su.tha Arivalagan
Mar 08, 2025,06:15 PM IST

டெல்லி: இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக ஊடுறுவ முயன்ற இந்தியரை ஜோர்டான் நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜோர்டான் வழியாக இந்த இந்தியர் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட இந்தியர் இவர் என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது எப்படி அமெரிக்காவுக்குள் புரோக்கர்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியர்களை கொண்டு செல்லப்படுகிறார்களோ அதுபோலத்தான் இந்த இந்தியரும் சிக்கி ஏமாந்து உயிரிழந்துள்ளார்.


அவரது பெயர் தாமஸ் கப்ரியல் பெரேரா. அவருடன் அவரது  மைத்துனர் எடிசன் சார்லஸும் உடன் சென்றுள்ளார். விசிட்டர் விசா மூலம் இந்த இருவரும் பிப்ரவரி 10ம் தேதி ஜோர்டான் வந்துள்ளனர். அங்கிருந்து இருவரும் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றனர். அந்த முயற்சியின்போதுதான் தாமஸ் கொல்லப்பட்டார். 




மாதம் ரூ. 3.50 லட்சம் சம்பளத்திற்கு வேலை பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி இந்த இருவரையும் புரோக்கர் கும்பல் ஜோர்டானுக்கு கூட்டிப் போயுள்ளது. ஏஜென்டுக்கு இதற்கான கட்டணமாக ரூ. 2.10 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். இதுதவிர ஜோர்டான் வந்ததும் மேலும் 52,289 ரூபாய் கொடுத்துள்ளனர். ஜோர்டான் தலைநகர் அம்மான் வந்த பிறகுதான் தற்போது வேலை எதுவும் இல்லை என்று புரோக்கர் தரப்பில் கைவிரிக்கப்பட்டுள்ளது.


ஆனால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அங்கு நேரடியாக போக முடியாது. மாறாக சட்டவிரோதமாக உள்ளே ஊடுறுவிச் சென்றால் வேலை கிடைக்கும் என்று புரோக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரைப் பணயம் வைத்து இருவரும் ஜோர்டான் எல்லையிலிருந்து இஸ்ரேலுக்குள் செல்ல முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தின்போது ஜோர்டான் ராணுவத்தினர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் தாமஸ் உயிரிழந்தார். காயத்துடன் உயிர் பிழைத்த எடிசனை, சிகிச்சைக்குப் பிறகு ஜோர்டான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தினர்.


இந்த இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அங்கு ஆட்டோ ஓட்டி நிம்மதியாக பிழைத்து வந்தனர். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் ஜோர்டானுக்குப் போயுள்ளனர். அங்கு பணத்தையும் இழந்து, ஒரு உயிரையும் பறி கொடுத்துள்ளனர்.