ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்
புதுடெல்லி: இந்திய ரயில்வே தனது டிக்கெட் ரத்து மற்றும் பணம் திரும்பப் பெறும் (Refund) விதிகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு ரீஃபண்ட் தொகை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏஜெண்டுகள் மற்றும் இடைத்தரகர்கள் சட்டவிரோதமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்வதைத் தவிர்க்கவும், உண்மையான பயணிகளுக்கு சீட் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ரத்து விதிகள் என்ன?
புதிய விதிகளின்படி, உறுதியான டிக்கெட்டை ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து ரீஃபண்ட் தொகை கணிசமாகக் குறையும்:
பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், குறைந்தபட்ச ரத்துக் கட்டணம் (Flat Cancellation Charge) மட்டுமே கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை திரும்ப வழங்கப்படும். இதற்கு முன்பு இந்த கால அவகாசம் 48 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
72 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை: இந்த இடைப்பட்ட காலத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
24 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை: ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
8 மணி நேரத்திற்குள்: இதுதான் மிக முக்கியமான மாற்றம். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு பைசா கூட ரீஃபண்ட் கிடைக்காது. தற்போதுள்ள விதிகளின்படி, 4 மணி நேரம் வரை ரீஃபண்ட் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகளுக்குக் கிடைத்துள்ள சில சலுகைகள் :
கடுமையான ரத்து விதிகளுக்கு மத்தியில், பயணிகளுக்குப் பயனுள்ள சில மாற்றங்களையும் ரயில்வே அறிவித்துள்ளது:
போர்டிங் பாயிண்ட் மாற்றம்: பயணிகள் தங்களது போர்டிங் ஸ்டேஷனை (Boarding Point) ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை மாற்றிக் கொள்ளலாம். இது பல ரயில் நிலையங்கள் உள்ள மாநகரங்களில் வசிக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தானியங்கி ரீஃபண்ட்: ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் இனி TDR (Ticket Deposit Receipt) தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது விதிகளின்படி ரீஃபண்ட் தகுதி இருந்தாலோ, பணம் தானாகவே வங்கித் கணக்கிற்கு வந்துவிடும்.
ஆதார் இணைப்பு: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆதார் சரிபார்ப்பு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவிலும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
ரயில்வே அமைச்சகத்தின் ஆய்வின்படி, கருப்புச் சந்தையில் டிக்கெட் விற்பவர்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புதிய 8 மணி நேரக் கட்டுப்பாடு இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் 15-க்குள் நாடு முழுவதும் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும். எனவே, பயணிகள் இனி தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே உறுதி செய்வதும், கடைசி நேர ரத்துகளைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது.