Middle East uncertainity: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
டெல்லி: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தைத் தொடங்கியவுடனேயே பெரும் சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி, விரைவாக 800 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், நிஃப்டி ஏறத்தாழ 250 புள்ளிகளை இழந்தது. காலை 9:45 மணியளவில், சென்செக்ஸ் 81,560 புள்ளிகளிலும், நிஃப்டி 24,859 புள்ளிகளிலும் வர்த்தகமாயின.
இந்தியா மட்டுமல்லாது, உலகளாவிய சந்தைகளிலும் இதே நிலைதான். மத்திய கிழக்கு மோதல், எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால் உலக நாடுகள் முழுவதும் இதே நிலைதான்.
கச்சா எண்ணெய் விலை 2% உயர்ந்து, ஜனவரி மாதத்திற்குப் பிறகு இல்லாத உச்சத்தைத் தொட்டது. உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடத் திட்டமிட்டுள்ளது. இதனால் பரபரப்பும் ஸ்திரமின்மையும் நிலவுகிறது. இதனால்தான் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஈரான் உலகின் ஒன்பதாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகும். இதன் தினசரி உற்பத்தி சுமார் 3.3 மில்லியன் பேரல்கள் ஆகும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தும் வரை அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்ததால், அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. தாக்கினால் மேலும் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவும் பதிலுக்கு எச்சரித்துள்ளது. ஆனால் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது. ஈரானுக்கு பல நாடுகள் அணு ஆயுதங்களை அளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யாவும் கூறியுள்ளதால் போர்ப் பதட்டம் மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.