கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
ஒட்டாவா: கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா சைனியின் இறந்த உடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வன்ஷிகா சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். வன்ஷிகா, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் தேவிந்தர் சிங்கின் மகள். எம்.எல்.ஏ குல்ஜித் சிங் ரந்தவாவின் நெருங்கிய உறவினவரும் ஆவார். பஞ்சாப் மாநிலம் டேரா பாசி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, டிப்ளமோ படிக்க இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒட்டாவாவுக்குச் சென்றார்.
இந்த நிலையில்தான் அவரது துர் மரணம் சம்பவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒட்டாவாவில் இந்திய மாணவி வன்ஷிகா இறந்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம். உள்ளூர் போலீசார் காரணத்தை விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கும், உள்ளூர் சமூக அமைப்புகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வன்ஷிகா ஏப்ரல் 25 அன்று காணாமல் போனார். அவரது செல்போன் ஆப் ஆகியிருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். போலீஸாரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர். இந்த நிலையில்தான் அவரது உடலை கடற்கரையிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.