இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்
டில்லி : இஸ்ரேல்-ஈரான் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான், ஈராக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மீதான வான்வெளி தொடர்ந்து கிடைக்காமல் உள்ளதால், விமானப் பயணங்களில் தாமதங்கள் மற்றும் நீண்ட பயண நேரம் ஏற்படக்கூடும் அல்லது ரத்து போன்றவை ஏற்படக் கூடும் என இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஜூன் 14, 2025) அன்று தனது எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக ஒரு பதிவைப் போட்டுள்ளது இண்டிகோ. அதில், ஈரான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் வான்வெளி தொடர்ந்து கிடைக்காமல் உள்ளது. குறிப்பிட்ட விமானப் பாதைகளில் மாற்றங்கள் தேவைப்படலாம், இது பயண நேரத்தை நீட்டிக்க அல்லது தாமதங்களை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தது.
விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், எங்கள் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க எங்கள் குழுக்கள் உறுதிபூண்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கும்போது உங்கள் பொறுமைக்கும் புரிதலுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் வான்வெளி மூடப்பட்டதால், இந்தியாவின் விமான அட்டவணைகள் வெள்ளிக்கிழமை அன்று பாதிக்கப்பட்டன. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த பதட்டங்கள் பிராந்தியத்தில் தொடர்ந்து நீடித்து, விமானப் போக்குவரத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.