International Men's day: பெண்கள் நாட்டின் கண்கள்.. ஆண்கள் வீட்டின் தூண்கள்!
- வே. தங்கப்பிரியா
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி அன்று சர்வதேச ஆண்கள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.ஆண்கள் தங்களின் குடும்பம் மற்றும் சமூகத்திற்கு செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு டாக்டர்.ஜெரோம் தீலக்சிங் சர்வதேச ஆண்கள் தினத்தை தோற்றுவித்தார். இவர் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தன் தந்தையின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் நவம்பர் 19 ஐ ஆண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடக்க காலத்தில் கரீபியன் தீவுகளில் ஆதரவை பெற்ற ஆண்கள் தினம், இப்போது பிற நாடுகளின் ஆதரவுகளை பெற்று தற்போது சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையானவர்கள் என்ற வெளித்தோற்றம் கொண்டு சமூகத்தால் கணிக்கப்படுகிறார்கள்.இதனால் அவர்களின் உணர்வு பூர்வமான தேவைகள் மதிக்கப்படாமல் மறைக்கப்படுகிறது.
சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு போன்ற சூழல்களில் பெண்களின் பங்களிப்பை விட ஆண்களின் பங்களிப்பே அதிகம். ஆண்களை பெரும் தியாகிகள் என்றே சொல்லலாம். பெண்கள் தங்கள் வலிகளை யாரிடமாவது சொல்லியோ அல்லது கண்ணீர் மூலம் வெளிப்படுத்தி விடுவார்கள். ஆண்கள் வெளியே கண்ணீர் சிந்துவதில்லை. மாறாக இதயத்தில் தங்கள் வலிகளை சுமக்கிறார்கள். குடும்பத்துக்காக தன் கல்வியை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற ஆண்கள் தியாகிகள் தானே!
சிறு வயதில் இருக்கும் போது தான் ஆசைப்பட்டதை அவர்கள் பெரியவர்களானதும் வாங்கி கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறுவார்கள். ஆனால் குடும்ப பொறுப்புகள் என்று வரும்போது அவர்கள் ஆசைகள் கனவாக போய்விடுகிறது. குடும்பத்துக்காக தன் கனவுகளை விடுத்து சம்மந்தமே இல்லாத வேலைக்கு சென்று நம்மை காப்பாற்றும் ஆண்கள் தியாகிகள் தான்.தனக்காக அல்லாமல் பிறருக்காக வாழ்பவர்கள் ஆண்கள்.
உலகெங்கிலும் உள்ள ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான,ஆதரவான சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.
(வே.தங்கப்பிரியா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)