IPL 2025 Finals.. கோப்பையை ஏந்தப் போகும் புது சாம்பியன் யார்.. சென்னை ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?

Su.tha Arivalagan
Jun 03, 2025,10:51 AM IST

அகமதாபாத்: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி இன்று மாலை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இன்று யார் வென்றாலும் சரி அவர்கள் புதிய சாம்பியனாக மலர்வார்கள் என்பதால் அனைத்து அணி ஆதரவாளர்களும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.


ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு குவாலிபயர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றது. குவாலிபயரில் தோற்றாலும் கூட எலிமினேட்டரில் அதிரடியாக மும்பை இந்தியன்ஸைக் காலி செய்து இறுதிப் போட்டிக்கு வந்து விட்டது பஞ்சாப். இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை பழிக்குப் பழி வாங்கி தனது முதல் கோப்பையை கையில் தூக்குமா பஞ்சாப் என்ற  பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.


குவாலிஃபயர் 1-ல் PBKS அணியை வீழ்த்தியதால், RCB அணிக்கு ஒரு சிறிய சாதகம் உள்ளது, ஆனால் 18 வருட கால ஏக்கத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுவரை ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை பெங்களூரு. ஒவ்வொரு தொடரும் அவர்களுக்கு ஏமாற்றத்தையேக் கொடுத்துள்ளது.




விராட் கோலி ஐபிஎல் 2025-ல் 614 ரன்கள் எடுத்துள்ளார், அவர் 700 ரன்களைத் தொட இன்னும் 86 ரன்கள் எடுக்க வேண்டும். அவர் இதைச் செய்தால்,, மூன்று வெவ்வேறு ஐபிஎல் சீசன்களில் 700+ ரன்களை எடுத்த உலகின் முதல் வீரர் ஆக உருவெடுப்பார். கோலி இதற்கு முன்பு ஐபிஎல் 2016-ல் 973 ரன்களும், ஐபிஎல் 2024-ல் 741 ரன்களும் எடுத்துள்ளார். அவர் தற்போது கிறிஸ் கெய்லுடன் சமநிலையில் உள்ளார், அவர் ஐபிஎல் 2012 மற்றும் 13-ல் 700+ ரன்கள் எடுத்துள்ளார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றைய ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. இரு அணிகளும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், RCB அணி குவாலிஃபயர் 1-ல் PBKS அணியை வீழ்த்தியது. விராட் கோலி RCB அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார், மேலும் அவர் இந்த போட்டியில் ஒரு வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை அவர்கள் வெற்றி பெறுவார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அவர்களும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால் ஒரு அற்புதமான கேப்டன் அவர்களுக்குக் கிடைத்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டமும், அபாரமான பார்மும் அந்த அணிக்கு மிகப் பெரிய பலமாக மாறியுள்ளது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் ஐயருக்கு உள்ளது. மேலும்  3 வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரது மத்தியில் நிலவுகிறது.


இந்த இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கடினம். ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்துள்ளனர். யார் வென்றாலும் அது புதிய  சாம்பியனாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் புதிய சாம்பியனை வரவேற்க காத்துள்ளனர்.