நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.. ஆர்வத்தில் ரசிகர்கள்..!

Manjula Devi
May 17, 2025,12:01 PM IST

பெங்களூரு: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. இதையடுத்து ரசிகர்களிடையே மீண்டும் ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை  மேற்கொண்டதால்  தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டதால் போர்ப் பதட்டம் தணிந்தது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, இன்று தொடங்கும் ஐபிஎல் 2025 லீக் போட்டிகள் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பிளே ஆப் சுற்று 29, 30, மற்றும் ஜூன் 1 தேதிகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இறுதிப் போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.




பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியில், பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏற்கனவே பெங்களூர் அணி 8 போட்டியில்  வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நினைவிருக்கலாம்‌.


திருத்தியமைக்கப்பட்ட அட்டவணைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் போட்டிகள் ஏதும் இடம் பெறாது. இந்த இரு அணிகளும் தகுதியிழந்து விட்டதால் போட்டிகளையும் மற்ற ஊர்களுக்குக் கொண்டு போய் விட்டனர்.