ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி, தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தோனி தற்போது தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விலகுவதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டம் உட்பட சிஎஸ்கே-வின் முதல் 4 அல்லது 5 போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. தோனி இல்லாத பட்சத்தில், அணியின் விக்கெட் கீப்பிங் பொறுப்பை சமீபத்தில் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எஸ். தோனி தற்போது தசைப்பிடிப்பு காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக, அவர் டாட்டா ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட வாய்ப்பில்லை. 'சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் தலைவா!'" என சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
44 வயதான தோனி, இந்த சீசனில் தனது பிட்னஸ் குறித்து ஏற்கனவே ROAR 26 நிகழ்வில் பேசியிருந்தார். தனது உடல்தகுதி சற்று குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் காயம் அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் முழு உடல் தகுதியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.