விராட் கோலி தனது முடிவை வாபஸ் பெற வேண்டும்.. தொடர்ந்து விளையாட வேண்டும்.. ஐபிஎல் தலைவர்
டெல்லி: விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை வாபஸ் பெற வேண்டும். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, இந்த வடிவத்தில் விளையாடுவதில்லை என்று அவர் முடிவு செய்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிசிசிஐ பொருளாளரும், இந்தியன் பிரீமியர் லீக்கின் தற்போதைய தலைவருமான அருண் துமல், கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கோலியின் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2025 சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அவரது அணி கோப்பையை வென்றாலும் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று துமல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி கோப்பையை வென்றால் கோலி ஓய்வு பெறுவாரா என்று கேட்கப்பட்டபோது, துமல் கூறுகையில், நான் அப்படி நினைக்கவில்லை. விராட் கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த தூதுவர். கடந்த 18 சீசன்களில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது. விராட் கிரிக்கெட்டிற்கு நோவக் ஜோகோவிச் அல்லது ரோஜர் பெடரர் டென்னிஸிற்கு இருப்பது போன்றவர் என்று நான் கூறுவேன். எனவே, அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
விராட்டின் உடற்தகுதி மிகச்சிறந்தது. 18 ஐபிஎல் சீசன்களுக்குப் பிறகும், அவர் முதல் சீசனில் இருந்ததை விட தற்போது இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார். மேலும், அதே ஆற்றலுடனும், அர்ப்பணிப்புடனும் ஆட்டத்திற்குத் திரும்புகிறார். முதல் சீசனிலும், அடுத்த 17 சீசன்களிலும் அவரது அர்ப்பணிப்புத் திறனைப் பார்க்கும்போது, அவர் அதே ஆக்ரோஷத்துடனும், ஈடுபாட்டுடனும் திரும்புவார். ஆர்சிபி வென்றாலும், நானும், ஒட்டுமொத்த தேசமும் விராட் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார் அவர்.
முன்னதாக, முல்லன்பூரில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் அணி விளையாடும் நான்காவது இறுதிப் போட்டி இதுவாகும். இருப்பினும் தற்போது இறுதிப் போட்டியிலும் பஞ்சாப் அணியைத்தான் அது சந்திக்கவுள்ளது. எலிமினேட்டர் பிரிவில் மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி இன்னும் தனது முதல் பட்டத்தை வெல்லும் தேடலில் உள்ளது. அவர்கள் 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த முந்தைய இறுதிப் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்தனர்.