கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
- தமிழ்மாமணி இரா. கலைச் செல்வி
அகரம் முதல எழுத்தெல்லாம் ,
ஆதிப்பகவன் என உரைத்த பொருட்குன்று நீ!
திறன்மிக்க தெய்வப் புலவன் அருளிய,
தரணியின் காணாப் பொக்கிஷம் நீ!
மனிதனின் மாண்புக்கு வழிகாட்டும் ஒளி நீ.!
திருவள்ளுவர் தந்த செம்மொழிக் குறள் நீ!
இரண்டடிகளில் ஏழிசைக் கீர்த்தியாய்,
எல்லாக் காலத்தும் ஏற்ற சாட்சி நீ!
அறம், பொருள், இன்பம் என முப்பால் கொண்டாய்.
அழியாத நீதியை அள்ளி வழங்கினாய்.
பதினெண் கீழ்க்கணக்கின் மணி மகுடமாய் நின்றாய்.
பாரெங்கும் தமிழர் புகழைச் பரப்பினாய்.
அன்பு, அறிவு, கடமை, பண்பென விரிந்து,
ஆழமாய் வேரூன்றி அகிலம் செழித்தாய்.
உன்போல் ஓர் நூலை உலகெங்கும் காண்பது,
உறுதியாய் இல்லை, உனக்கு நிகர் நீயே!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)