இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

Su.tha Arivalagan
Jun 14, 2025,06:21 PM IST

டெஹ்ரான்: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல ஈரானிய உயர்மட்ட தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது புதிய ராணுவத் தளபதியை ஈரான் நியமித்துள்ளது.


புதிய முப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அமீர் ஹத்தாமி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய உயர் தலைவர் அயத்துலா கமேனி அறிவித்துள்ளார். இதேபோல மேலும் பல ராணுவ அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே, இஸ்ரேலின் தாக்குதலை மிகவும் அழகான தாக்குதல் என்று சிலாகித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இப்போதும் லேட்டாகவில்லை. உடனடியாக அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடலாம் என்றும் அவர் ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.




அத்தோடு நில்லாமல், உலகின் சிறந்த மற்றும் மிகவும் ஆபத்தான இராணுவ உபகரணங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இஸ்ரேலிடம் அவற்றில் நிறைய உள்ளன என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்காவும் இந்தப் போரில் மறைமுகமாக இஸ்ரேலுக்கு உதவுவதாக அவர் தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.


டிரம்ப் மேலும் கூறுகையில், சில ஈரானிய தீவிரவாதிகள் தைரியமாக பேசினார்கள், ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. இப்போது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள், அது இன்னும் மோசமாகிவிடும். ஏற்கனவே பெரும் மரணமும் அழிவும் நடந்துள்ளன, ஆனால் இந்த படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் இருக்கிறது, அடுத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமாக இருக்கும். எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், மற்றும் ஒரு காலத்தில் ஈரானிய பேரரசு என்று அறியப்பட்டதை காப்பாற்ற வேண்டும். இனியும் மரணம் இல்லை, இனியும் அழிவு இல்லை, இது மிகவும் தாமதமாகும் முன் செய்யுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று அவர் மேலும் கூறினார்.