அலி லாரிஜானியை இழந்தது ஈரான்.. இஸ்ரேலைப் பழிவாங்குவோம் என ராணுவம் சூளுரை

Su.tha Arivalagan
Mar 18, 2026,11:35 AM IST

டெஹரான்:  ஈரான் நாட்டின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரியான அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது படுகொலைக்கு பழி வாங்குவோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளருமான அலி லாரிஜானி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெஹரானின் கிழக்குப் பகுதியில் உள்ள பர்திஸ் மாவட்டத்தில் லாரிஜானியின் மகள் வீட்டில் அவர் இருந்தபோது, இஸ்ரேலிய போர் விமானங்கள் அந்த வீட்டின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் அலி லாரிஜானி, அவரது மகன் மோர்டேசா லாரிஜானி மற்றும் அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.




அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரானின் அதிகார மையத்தில் மிக முக்கியமான நபராக லாரிஜானி கருதப்பட்டார். இவர் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராகவும், அணுசக்தி பேச்சுவார்த்தை குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.


கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், தற்போது லாரிஜானியும் கொல்லப்பட்டிருப்பது ஈரான் அரசுக்கு மீள முடியாத பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.


காமேனிக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி பதவி ஏற்பதை லாரிஜானி எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மரணம் ஈரானின் உள்நாட்டு அரசியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே பதற்றமாக இருக்கும் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஈரானின் ராணுவத் தளபதி இதற்குப் பழிவாங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.