நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா.. இல்லையா.. மாறுபட்ட தகவல்களால் குழப்பம்
டெல்லி: ஏமன் நாட்டவரை மயக்க ஊசி போட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி தகவல் வெளியிட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அது சரியான தகவல் இல்லை. தண்டனை முழுமையாக ரத்தாகவில்லை என்று மறுத்துள்ளது.
இதனால் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்தாகி விட்டதா இல்லையா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கையில், நிமிஷா பிரியாவின் தண்டனை தொடர்பாக சிலர் வெளியிட்டுள்ள தகவல் சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி எனப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார். இவரது தலைமையிலான குழுதான் தற்போது ஏமன் நாட்டுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொல்லப்பட்ட ஏமன் நாட்டவரான மஹ்தியின் குடும்பத்தினருடனும் இவர்கள் பேசி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாகவே நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது நிரந்தரமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக முஸ்லியாரின் அலுவலகம் தகவல் வெளியிட்டது. ஆனால் மத்திய அரசுத் தரப்பில் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மாறாக அது சரியான தகவல் அல்ல என்ற விளக்கம் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குழப்பம் எழுந்துள்ளது.
முன்னதாக கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்ட தகவலில், தலைநகர் சனாவில் நிமிஷா பிரியாவின் தண்டனை தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மரண தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
37 வயதான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த மஹ்தி என்பவருடன் இணைந்து 2015ம் ஆண்டு கிளினிக் ஒன்றைத் தொடங்கினார். நாளைடவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிளினிக்கின் முழுக் கட்டுப்பாட்டையும் மஹ்தியே எடுத்துக் கொண்டார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக் கொண்டார். இதனால் மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றுள்ளார் நிமிஷா. ஆனால் மயக்க ஊசியில் அவர் கொடுத்த மருந்து அதிகமாக மஹ்தியின் உயிரைப் பறித்து விட்டது.
இதையடுத்து நிமிஷா பிரியா மீது கொலை வழக்கு போடப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.