கடவுள் இருக்கிறாரா இல்லையா?

Su.tha Arivalagan
Nov 20, 2025,11:06 AM IST
- மைத்ரேயி நிரஞ்சனா

இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு பலமுறை தோன்றியிருக்கும்! பொதுவாக சொல்லப்படுவது என்னவென்றால் .. இவ்வளவு பெரிய உலகம்…இதை நான் உருவாக்கவில்லை என்றால் யார் உருவாக்கி இருப்பார்கள்.. அது கடவுளாகத் தான் இருக்க முடியும்..? அப்படியா? 

ரமண மகரிஷிடம் ஒருவர் இந்த கேள்வியை கேட்டபோது அவர் சொன்ன பதில்.. கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்வியை விட நீ இருக்கிறாயா? நீ எங்கே இருக்கிறாய் என்று கண்டுபிடி என்று பதில் சொன்னாராம்..

புத்தரிடம் ஒருவர் தான் பெரிய ஆன்மீகவாதி என்றும் ஆனால் உங்களிடமிருந்து பதில் பெற விரும்புகிறேன் என்று கடவுள் இருக்கிறார் தானே என்று கேட்க.. அவர் சொன்னாராம் கடவுள் இல்லை என்று.. கடவுள் என்ற உருவ வழிபாடு புத்த மதத்தில் கிடையாது..
அடுத்த நாள் இன்னொருவர் வந்து தான் நாத்திகவாதி என்றும்.. கடவுள் இல்லை தானே என்று கேட்க.. அவரிடம் புத்தர் கடவுள் நிச்சயமாக இருக்கிறார் என்ற பதில் சொன்னாராம்.. அதற்கு ஏன் என்ற விளக்கமும் கொடுத்தாராம்..

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது சீடர் இரண்டு வேறு விதமான பதில்களை கூறி இருக்கிறீர்களே என்று கேட்க.. அவர் சொன்ன பதில்.. இந்த புத்திக்கு (Mind) தான் சரியாக தான் இருக்கிறோம் என்பது அகங்காரத்துக்கு வழி வகுக்கும்…அந்த அகங்காரத்துக்கு தான் நான் பதில் சொன்னேன் என்று கூறினார்! 



ஒரு சிறிய கதையை பார்ப்போமா? 

காஷ்முஷ் ஒரு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.. அப்போது தொலைவில் ஒரு சிறிய கூட்டமாக சிலர் வந்து கொண்டிருந்தனர்.. அப்போதுதான் அந்த ஊரில் கூட்டமாக கொள்ளையர் வந்து கொள்ளையடிப்பதாக கேள்விப் பட்டிருந்தார்..  அந்த மனிதர்களை பார்த்தவுடன் கொள்ளையர்கள் தான் வருகிறார்கள் என்று கற்பனை செய்து தன்னை அவர்கள் தாக்கப் போவதாகவும் நினைக்க ஆரம்பித்தார்.. பக்கத்தில் ஒரு இடுகாடு தெரியவும் அதன் சுவர் வழியாக ஏறி குதித்து பக்கத்தில் வெட்டப்பட்டிருந்த ஒரு குழியில் படுத்துக்கொண்டார்.. இப்போது அவர்கள் பார்த்தால் இறந்து போய்விட்ட மனிதனை என்ன செய்ய முடியும் என்று போய்விடுவார்கள் என்று நினைத்தார்..

தூரத்தில் வந்து கொண்டிருந்த மனிதர்கள் ஒரு திருமண கூட்டம்.. அவர்களும் இவரை பார்த்து விட்டனர்.. இந்த மனிதனுக்கு என்னவாயிற்று என்று ஆர்வத்துடன் சிலர் வந்து எட்டிப் பார்த்து..  நீ ஏன் இந்த குழியில் இருக்கிறாய்  என்று கேட்க..காஷ்முஷ் “நீங்கள் என்னிடம் கஷ்டமான கேள்வியை கேட்கிறீர்கள், உங்களால் தான் நான் இங்கு இருக்கிறேன்.. என்னால் தான் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் “ என்று கூறினார்..

இங்கு நடப்பவை எல்லாம் நம்முடைய கற்பனை.. அது விளையாட்டு போல நடந்து கொண்டிருக்கிறது..(Seriousness is Mind, without seriousness Mind cannot exist)..

சக்தி என்பது ஒன்றுதான்.. அது பலவிதமாக தன்னை பிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது..
கடவுள் இந்த உலகத்தை உருவாக்கினாரா? உருவாக்குதல் என்பது ஒரு சீரியசான விஷயமாக பார்க்கப்படுகிறது.. ஆனால் இந்து மத தத்துவப்படி ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.. விளையாட்டு என்னும் போது அதில் சீரியஸ் தன்மை என்பது இல்லை.. இதுவே மிகப்பெரிய தத்துவம்.. 

விளையாட்டு என்பதில் எல்லாம் சீரியஸ்னஸும் எடுக்கப்பட்டுவிடுகிறது..! குழந்தைகளிடம் ஏன் விளையாடுகிறாய் என்று கேட்டால் விளையாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதுதான் பதிலாக இருக்கும்.. எதையும் அடைவதற்காக அல்ல.. இதுதான் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..(Playing Not to achieve anything is Real Play) விளையாடுதல் கொண்டாடுதல்.. மகிழ்ச்சியாக இருத்தல் .. தியானமும் அது போல்தான்.. எந்த இலக்கும் இன்றி இருத்தல்..(A Self Play) 

நாம் தொடர்வோம்…

மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.