தோப்பு கர்ணம் – ஆன்மீகமா, அறிவியலா.. அல்லது உடற்பயிற்சியா?

Su.tha Arivalagan
Apr 04, 2026,04:24 PM IST

- தி. மீரா


தோப்பு கர்ணம் என்பது இந்திய பாரம்பரியத்தில் மிகவும் பழமையான ஒரு உடற்பயிற்சி மற்றும் ஆன்மிகப் பயிற்சியாகும். இது உடலுக்கும், மனதுக்கும், நினைவாற்றலுக்கும் நன்மை தரும் என்று நம்பப்படுகிறது. பள்ளிகளில் தண்டனையாகவும், கோவில்களில் விநாயகர் முன் பக்தியுடன் செய்யும் வழக்காகவும் இது அறியப்படுகிறது.


“தோப்பு” என்பது கைகளை மாற்றிக் கொண்டு பிடித்தல், “கர்ணம்” என்பது காது என்று பொருள்.

அதாவது, வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுவது தான் தோப்பு கர்ணம்.


தோப்பு கர்ணம் பெரும்பாலும் விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடையது.  தமிழக கோவில்களில், குறிப்பாக பிள்ளையார் கோவில்களில், பக்தர்கள் தங்கள் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், மனசுத்திக்காகவும் தோப்பு கர்ணம் போடுவது வழக்கம்.




ஒரு புராணக் கதையின் படி, விநாயகர் ஞானத்தின் கடவுள் என்பதால், அவரை வணங்கி தோப்பு கர்ணம் செய்வது அறிவு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் ஆகியவற்றை வளர்க்கும் என்று நம்பப்பட்டது.


பழைய காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் கவனம் செலுத்தவும், ஒழுக்கம் பெறவும், தோப்பு கர்ணம் போடச் செய்வார்கள். இது தண்டனையாக இருந்தாலும், உண்மையில் உடற்பயிற்சி மற்றும் மூளைச் செயல்பாட்டை தூண்டும் ஒரு எளிய பயிற்சி ஆகும்.


இன்றைய காலத்தில் இதை சிலர் “Super Brain Yoga” என்றும் அழைக்கிறார்கள். இதன் மூலம் மூளையின் இரு பக்கங்களும் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்று சிலர் கூறுகின்றனர்.வெளிநாடுகளில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.


தோப்பு கர்ணம் செய்வது எப்படி?


நேராக நின்றுக்கொள்ள வேண்டும். வலது கையால் இடது காதைப் பிடிக்க வேண்டும். இடது கையால் வலது காதைப் பிடிக்க வேண்டும். மெதுவாக உட்கார்ந்து எழ வேண்டும். இதை 10 முதல் 20 முறை வரை செய்யலாம்.


மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

 

தோப்பு கர்ணம் செய்தால் மனம் ஒருமுகப்படுத்தப்படும். படிப்பிலும், வேலையிலும் கவனம் அதிகரிக்கும். கைகளை மாற்றிக் கொண்டு காதைப் பிடிப்பதால் மூளையின் இடது மற்றும் வலது பக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.


உட்கார்ந்து எழும் இயக்கம் கால்கள், முழங்கால், இடுப்பு, முதுகு போன்ற உறுப்புகளுக்கு பயிற்சி தருகிறது. தோப்பு கர்ணம் செய்வதால் மனம் அமைதியாகி, பதட்டம் குறையும்.


கோவில்களில் பக்தியுடன் செய்யப்படுவதால், இது பணிவு, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவற்றை வளர்க்கிறது. இயக்கத்தின் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.


மாணவர்களுக்கு இதனால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் மனப்பாடம் எளிதாகும் தேர்வு பயம் குறையும் சுறுசுறுப்பு அதிகரிக்கும் 


தோப்பு கர்ணம் என்பது ஒரு சாதாரண உடற்பயிற்சி மட்டுமல்ல; அது பாரம்பரியம், பக்தி, ஒழுக்கம், ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு சிறந்த பழக்கமாகும். பழமையான இந்த வழக்கம் இன்றும் நம் வாழ்வில் பயனுள்ளதாக உள்ளது. எனவே, தினமும் சில நிமிடங்கள் தோப்பு கர்ணம் செய்வது உடலுக்கும், மனதுக்கும், அறிவுக்கும் நன்மை தரும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)