பஹல்காம் பயங்கர தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ.. என்ஐஏ விசாரணையில் தகவல்

Su.tha Arivalagan
May 02, 2025,01:41 PM IST

டெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும், லஷ்கர் இ தொய்பா இயக்கமும் இணைந்து திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி என்ஐஏ தீவிரப்படுத்தியுள்ளது.


ஏப்ரல் 22 அன்று பாஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் குறித்து NIA விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை இவர்கள் பேட்டாப் பள்ளத்தாக்கில் மறைத்து வைத்திருந்தனர். 




NIA நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ISI உளவு அமைப்பும் இந்த தாக்குதலுக்கு திட்டமிட உதவி செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையில் பாரா கமாண்டோவாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு TRF என்ற அமைப்பு முதலில் பொறுப்பேற்றது. ஆனால், சர்வதேச அழுத்தம் காரணமாக அந்த அமைப்பு தனது கூற்றை மறுத்தது. 


என்ஐஏ  விசாரணையில் மேலும் சில விஷயங்கள் தெரியவந்துள்ளன. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பேட்டாப் பள்ளத்தாக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். அவர்களுக்கு சில உள்ளூர்வாசிகள் உதவி செய்துள்ளனர். அந்த உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு முக்கியமான தகவல்களை கொடுத்து உதவியுள்ளனர். NIA வட்டாரங்களின்படி, பயங்கரவாதிகள் இன்னும் தெற்கு காஷ்மீரின் காடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்த பயங்கரவாதிகள் 5 முதல் 7 பேர் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். அவர்கள் தாக்குதலை தொலைவிலிருந்து ஒருங்கிணைத்து இயக்கியுள்ளனர். NIA ஏப்ரல் 27 அன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. NIA தலைவர் சதானந்த் டேட், ஏப்ரல் 22 அன்று பைசாரனில் நடந்த தாக்குதல் இடத்தை பார்வையிட்டார். தடயங்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். மேலும், சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 


தீவிரவாதிகளுக்குத் தேவைப்படும் உதவிகளை OGW எனப்படும் Overground Workers செய்துள்ளனர் என்றும் NIA தெரிவித்துள்ளது. Overground Workers என்றால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் உள்ளூர்வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.