ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

Su.tha Arivalagan
Jun 13, 2025,11:55 AM IST

டெஹரான்: இஸ்ரேல் விமானப்படை,  வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிர வைத்துள்ளது. ஈரானின் அணு உலை மற்றும் இராணுவ தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.


வெள்ளிக்கிழமை காலை ஈரானிய தலைநகரில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் "100 சதவீதம் இயக்கத் திறனில்" இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.


ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், இஸ்ரேல் அரசின் முன்கூட்டிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு மற்றும் அதன் குடிமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது  என்று தெரிவித்தார்.




இஸ்ரேலின் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலைகள் 6 சதவீதம் வரை உயர்ந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான், இஸ்ரேலைத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னதாக எச்சரித்திருந்தார். இதையடுத்தே ஈரான் முந்திக் கொண்டு தாக்கியுள்ளது. 


அதேசமயம், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்று அமெரிக்கா விளக்கியுள்ளது. அமெரிக்கா மீது ஈரான் தாக்க முயலக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.