நிலவிலிருந்து சாம்பிள் எடுக்கத் திட்டம்.. சந்திரயான் 4 குறித்து இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!
- அ.கோகிலா தேவி
பெங்களூர்: விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் இஸ்ரோவின் வருங்கால திட்டம் அமையும் என்றும், நிலவிலிருந்து சாம்பிள் எடுத்து வரும் வகையில் சந்திரயான் 4 திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ தற்போது அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளிக் கழகங்களுக்கு இணையான பெருமையைப் பெற்றுள்ளது. குறிப்பாக சந்திரயான் திட்டம் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இஸ்ரோ.
இந்த நிலையில் இஸ்ரோவின் வருங்காலத் திட்டங்கள் குறித்து அதன் தலைவர் நாராயணன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வணிக ரீதியான செயற்கைக்கோள் மற்றும் பி. எஸ்.எல்.வி , ஜி.எஸ்.எல்.வியும் அடங்கும்.
நிலாவில் இருந்து மாதிரியை எடுத்துவரும் வகையில் சந்திராயன் - 4 திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை 2028-ம் ஆண்டு செயல்படுத்த நாங்கள் திட்டம் தீட்டியுள்ளோம்.
மற்றொரு திடம் லூபெக்ஸ். இது நிலவின் துருவத்தை ஆய்வு செய்ய ஜப்பான் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல தயாரிப்பை 3 மடங்காக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலமாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் விண்கலம் 2027ல் செலுத்தப்படும். அதுதொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் நிலவுக்கு 2040-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். அதுதொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
( அ.கோகிலா தேவி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)