கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. மக்களை உலுக்கியுள்ளது.. பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல்
Sep 28, 2025,12:58 PM IST
திருச்சி: கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்துள்ளார்கள். இந்த துயரச் சம்பவத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
கரூர் நகரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், மிக வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களைப் பெரிய அளவில் உலுக்கி துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவினால் போர் கால அடிப்படையில் துயர் துடைப்பு பணி நடைபெற்று வருகின்றது. முதலமைச்சரும் களத்திற்கு உடனடியாக புறப்பட்டு செல்கிறார். அமைச்சர்களும் களத்தில் இறங்கி துயர் துடைப்பு பணியாற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.