ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

Su.tha Arivalagan
Mar 09, 2026,02:05 PM IST

புதுடெல்லி: ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்கக் கோரி இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று (மார்ச் 09, 2026) கடும் அமளியில் ஈடுபட்டன. இதற்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பேச்சுவார்த்தை ஒன்றே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.


மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் :


இன்று காலை மக்களவை கூடியது முதல், ஈரான் போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், இது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.


மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம் :




மறுபுறம், மாநிலங்களவையில் நிலவி வரும் பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "ஈரான் போர் பதற்றத்தைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தையே இறுதித் தீர்வாக அமையும் என்பதே இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களைத் தணிக்க தூதரக ரீதியிலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கும் இந்தப் பிராந்தியம் மிக முக்கியமானது. இதனால் அங்கு நிலவும் சூழலைப் பிரதமர் நரேந்திர மோடியும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.