பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

Su.tha Arivalagan
Apr 29, 2025,06:30 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசத்தில் இருந்த பல சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. 


சமீபத்தில் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீர் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. தூத்பத்ரி, வெரிநாக் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த வருமானத்தை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பலர் திரும்பி செல்கின்றனர். ஏற்கனவே பதிவு செய்திருந்த பயணங்களையும் ரத்து செய்து வருகின்றனர்.




சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு பஹல்காம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் இப்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.


பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உமர் அப்துல்லாவும் வலியுறுத்தியுள்ளார்.  சட்டசபையில் அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் அப்பாவி மக்களை கொல்வதற்கு எதிராக வெளிப்படையாக வந்துள்ளனர். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 


கதுவா முதல் குப்வாரா வரை எல்லா ஊர்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். என் பெயரில் இது நடக்கவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். இது தானாக நடந்த போராட்டம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வார்த்தைகள் இல்லை. இந்த துயரத்தை வைத்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த விரும்பவில்லை. என் அரசியல் மலிவானது அல்ல என்றார் அவர்.


சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், அங்கு வியாபாரம் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுலாப்  பயணிகளை நம்பி இருந்த ஓட்டல்கள், கடைகள் மற்றும் போக்குவரத்து தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்பும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.