ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கிக் கிடக்கும் இந்தத் திரைப்படம், தற்போது மறுதணிக்கைக்கு அனுப்பப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது, அதில் உள்ள சில காட்சிகள் அல்லது வசனங்கள் காரணமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் இழுபறி நீடித்தது. தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதுதொடர்பாக படக்குழுவினர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல விதமான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு ஒன்றை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ஜனநாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். கடந்த முறை படத்தை ஆய்வு செய்த ஐந்து பேர் கொண்ட தணிக்கைக் குழுவினர், இந்த முறை அமையும் மறு ஆய்வுக் குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
படத்தின் மீதான விமர்சனங்களை நடுநிலையோடு அணுகும் பொருட்டு முற்றிலும் புதிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவே படத்தை மறுஆய்வு செய்யும். கடந்த ஒரு மாத காலமாக படம் முடங்கியுள்ளதால், இந்த மறுதணிக்கை செயல்முறைகளை விரைந்து முடித்து தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை நெருக்கடிகளைத் தாண்டி எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு படக்குழுவினருக்கு ஒரு சிறிய நிம்மதியைத் தந்துள்ள நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.