ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே படத் தயாரிப்பு நிறுவனம் அணுகுமாறும் உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் ஜனநாயகன் படம் உடனடியாக வெளிவருவதற்கான வாய்ப்புகள் மேலும் அருகி விட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, அவரது கடைசிப் படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காத தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் முறையிட்டது. முதலில் இதை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, சென்சார் வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உடனடியாக யுஏ சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. ஜனவரி 20ம் தேதிக்கு வழக்கையும் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை படத் தயாரிப்பு நிறுவனம் அணுகியது. அங்கு இன்று நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பல கருத்துக்களை முன் வைத்து, பின்னர் தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
விசாரணையின்போது நீதிபதி தத்தா முன் வைத்த கருத்துக்கள்:
இந்த வழக்கு அதி வேகமாக இருக்கிறது. ஏற்கனவே (உயர்நீதிமன்ற) டிவிஷன் பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணையில் உள்ளபோது அதே கோரிக்கையுடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்களது கோரிக்கையாவது மாற்றியிருக்க வேண்டும். அதை மாற்றுங்கள் அல்லது டிவிஷன் பெஞ்ச்சிடமே செல்லுங்கள்.
உங்களது கோரிக்கையை டிவிஷன் பெஞ்ச் முன்பு வையுங்கள். ஜனவரி 20ம் தேதி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கட்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற பெஞ்ச்.